சுற்றமேயானாலும் அவன் முற்றத்தில் ஒரு கால் வைக்கும் முன் அவன் முகத்தில் சம்மதத்தை எதிர்பார்க்கும் நாகரீகம் உடையோர் நாம். எம் படலை தாண்டி, வாசற்படியேறி, எம் நெஞ்சின் மீது தன் சப்பாத்துக்கால்களை வைத்து எம்மைக் கேள்வி பல கேட்க, இந்த சிங்கள இராணுவக் காடையர் கூட்டம் எப்போது யாரிடம் பெற்றது அனுமதியை? ஏங்கு கற்றன இந்த உயர் பண்பை? யார் புகட்டினார் இந்த நாகரீகத்தை? நாம் அடங்கி அமுங்கிப்போன அந்தக் காலங்களில் எம்முடன் அடங்கிப் போன இரத்தமும் சதையும் உணர்வுமான கதைகள் ஆயிரம் ஆயிரம்!
அந்த ஆயிரத்தில் இதுவும் ஒன்று. இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் எனப்படும் பிரதேசத்தில் இடம்பெற்ற உண்மைகள் இவை.
ஆயிரம் அரைகுறை சமாதானம் வந்தென்ன ஆறுமா எம் ஆன்மாக்கள்? ஆழ அல்லவோ புதைந்து விட்டது அவனது கொலைவெறி பிடித்த பார்வை! அந்தப் பிசாசுகளின் கொலை வெறியை நேரில் கண்ட பதினொரு வயதுப்பெண்ணின் கதையிது!
அவளிடமிருந்து அந்த உண்மைகளைக் கேட்டறிந்தவர் - கதைவிளம்பி, ஈழம். தொகுத்து தருபவர்:- சந்திரா. ரவீந்திரன்.)
எங்கட அப்பா…..!
எங்கட அப்பா மூதூர் ~டவுனிலை ஒரு சின்னப் பல சரக்குக் கடை வைத்திருந்தவர். அதிலிருந்து வந்த வருமானம் எங்கட குடும்பத் தேவைகளுக்குப் போதுமானதாக இருந்தது.
என்ரை பெயர் வனிதா. ஏங்கட குடும்பத்தில மொத்தம் அஞ்சு பேர். அப்ப எனக்கு பதினொரு வயது.
வீட்டிலிருந்து அரை மைலுக்கு அங்கால தான் அப்பாட கடை இருந்தது. அப்ப ஒரு நாள், நிறைய ஆமி வந்து ~டவுனை ரவுண்டப் பண்ணி ஆக்களை வெளிய விடாமல் மறிச்சிட்டாங்கள். அதில தான் எங்கட அப்பாவும் பிடிபட்டவர்.
நாங்கள் அப்பாவுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு கடைக்குப் போனம். அப்ப ஒரு ஆள் ஓடிவந்து சொன்னார் ~~ உங்கட அப்பாவை ஆமி பிடிச்சுக் கொண்டு ஜிபி.எஸ் ~காம்ப் பக்கமாகக் ( இது ஆமியின் கட்டைபறிச்சான் முகாம்) கொண்டு போறாங்க என்று. எங்கட அப்பாவோட இன்னும் ஏழு பேரைப் பிடிச்சிருந்தாங்களாம்.
நாங்கள் ஓடிப்போய் விசயத்தை அம்மாவிட்டைச் சொல்லி, அம்மாவோடை சேர்ந்து ~கேம்ப் பிற்கு ஓடிப்போய் வாசல்லை நிண்டு கத்தினம்! ஆமி வந்து அம்மாக்குப் பேசினான். ~~உங்கட அப்பாவை நாங்க பிடிக்கேல்லை..போங்க போங்க.. என்று எங்களை விரட்டினான். நாங்கள் போகேல்லை. ~கேம்ப் பின் பக்கத்து வளவில் போய் அதில இருந்து ~கேம்ப் பின் பக்கத்தையே பார்த்தபடி நிண்டம்.
அந்த நேரம் கொஞ்சப்பேரை அடிச்சு இழுத்துக் கொண்டு ஆமிக்காரர் வெளியில வந்தாங்க. அதில எங்கட அப்பாவும் இருந்தவர். நாங்கள் அவரைக் கண்டனாங்க. அவருக்கு கையெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது!
சாரம் கழண்டு விழ அதைக் கட்டிக்கொள்ள ஏலாமல் அப்பா போய்க்கொண்டிருந்ததைப் பார்த்திட்டு, ~~ அந்தா…அப்பா….அப்பா… எண்டு கத்தினம்! பிறகு என்ன செய்யிறதெண்டு யோசிச்சுப் போட்டு, வீட்டில போய் தங்கியிருந்திட்டு பின்னேரம் திரும்பவும் அங்க போனம். அப்ப ஆமிக்காரன், எங்களை விட்டிட்டு அம்மா மட்டும் உள்ளை வந்தாத்தான் அப்பாவை வெளிய விடுவம் என்று அதட்டினான்!
நாங்கள் அம்மாவை உள்ள போய் அப்பாவைக் கூட்டி வரும்படி ~~போம்மா…போம்மா.. என்று அம்மாவைத் தள்ளினம்! அம்மா ஒரு மாதிரி யோசித்துக் கொண்டு ~~ அங்கெல்லாம் நாங்கள் போகக்கூடாது எண்டு சொன்னா. நாங்க விடேல்லை ~~ போம்மா….போம்மா….. எண்டு அம்மாவுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தம். அப்ப…வந்த ஆமிக்காரன் ஒருத்தன் கண்ணெல்லாம் ஒரு சாதியாய் முழிச்சு அம்மாவைப் பாத்து ~~ ஏ..வாடி ! உள்ள போடி… என்று கத்திப் பேசினான். அதுக்கு அம்மா ~~இல்லை…நான் பெரிய சேர் வாற வரைக்கும் நிண்டிட்டுத்தான் போவன் எண்டு சொல்ல, அவன் உடன தன்ரை சப்பாத்துக் காலால எட்டி அம்மாட நெஞ்சில உதைய அம்மா போய் விழுந்திட்டா. நாங்க ஓடிப்போய் அம்மா…அம்மா.. எண்டு அம்மாவைப் பிடிச்சி அழுதம்! கடைசியாக அம்மா எங்களைக் கூட்டிக்கொண்டு வீட்ட வந்திட்டா.
பிறகு…ஒவ்வொருநாளும் ~கேம்ப் பில போய் அழுறது தான் எங்கட வேலையாக இருந்தது. ஆமிக்காரர் ஒவ்வொரு தடவையும் ~~ இந்தா அப்பாவைக் காட்டுறம்….பின்னேரம் வாங்க…நாளைக்கு வாங்க… எண்டு சொல்லி எங்களை ஏமாத்தினாங்களே தவிர கடைசி வரையும் அப்பாவைக் காட்டேல்ல!
ஒரு நாள், ஒரு முஸ்லீம் ஆள் வந்து சொன்னான் ~~ அக்கா இனி நீங்க உங்க புருஷனைத் தேடி ~கேம்ப் பக்கம் வரவேணாம். ஏனெண்டா உங்கட புருஷனை சாக்கில கட்டி, புளியடிப்பக்கம் கொண்டு போட்டாங்க எண்டு.
நாங்க எல்லாம் கத்தி அழுது கொண்டு புளியடிக்கு ஓடினம். அந்தப் புளியடி, ஜிபி.எஸ் ~கேம்ப்க்கு முன்னால இருக்கு. அது தான் ஆமிக்காரர், ஆக்களை ரயர் போட்டு எரிக்கிற இடம்! அங்க நாங்க போனம்.
~~ அம்மா….! சாக்கோட உருண்டு உருண்டு உருண்டு….கத்திக் கேட்குது! சாக்கோட சேத்து நெருப்பு வச்சிட்டாங்க! ~~ ஐயோ…ஐயோ…. எண்டு பெரிய சத்தமாய் கத்துறது கேட்குது! எல்லாச் சாக்கும் நெருப்பு எரிய எரிய அங்கையும் இங்கையும் உருளுது…துடிக்குது! நாங்க இங்க இருந்து கொண்டு ~~அப்பா….அப்பா…அப்பா… எண்டு கத்திக்கொண்டேயிருந்தம்!! சாக்கு எரிஞ்சு கொண்டு போகும்போது அப்பாட சாரத்தைக் கண்டனாங்கள்! நாங்க இன்னும் பெரிசா கத்தினம்! எங்கட அப்பா தான் எரியிறார் எண்டு எங்களுக்கு தெரிஞச்சிட்டுது! எங்கட அப்பாவோட இன்னும் ரெண்டு பேரை எரிச்சவங்க….அவங்க யார் எண்டு தெரியாது. கிpட்டப் போக முடியேல்லை. சாக்கெல்லாம் உருண்டு துள்ளி…கத்தி…எல்லாம் ஓஞ்சு கடைசில அப்படியே ஒரு துடிப்பும் இல்லாம எரிஞ்சிச்சு. அதை அப்படியே பாத்தம். அப்பா எரியக்குள்ளை அதைப் பாக்க மட்டும் தான் எங்களுக்கு முடிஞ்சுது. ஆமிட்ட போய் எங்கட அப்பாவை உயிரோட எரிச்சது எண்டு சொல்லி கத்தினம். ஆனா அவன் ~~உங்கட அப்பாவை நாங்க பிடிக்கவே இல்ல எண்டு சொல்லிட்டான்.
கடைசியாக அப்பாட மரண ~சேட்டிபிக்கற் ~~இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் எண்டு தான் தந்தவங்க. நாங்க சொன்னம்…~~ ஆமி தான் அப்பாவைக் கொண்டவங்க..அதை நாங்க பாத்தம்.. எண்டு. அப்பிடிச் சொன்னா நட்ட ஈடு கிடைக்காது…அப்பிடிச் சொல்லக்கூடாது எண்டு பொலிஸ்காரன் சொன்னவன்!
அதுக்குப் பிறகு எங்கட குடும்பம் கஸ்டம்! ஆதாரமான அப்பா இல்லாததால வந்த கஸ்டம்! எல்லாத்தாலும் ~இனந்தெரியாதவர்களால் சுடப்பட்டார் எண்டு ~சைன் வச்சித்தான் நட்டஈடு எடுத்தம். இது 87ம் ஆண்டு 5ம் மாதம் 27ம் திகதி நடந்தது. இந்தக் காலத்தில இப்படித்தான் நிறையப் பேருக்கு மரண ~சேட்டிபிக்கற் குடுத்தவங்க.
இதுக்குப் பிறகு..கிழிஞ்ச வெள்ளைச் சட்டையும், முருங்கைக் கீரையும் சோறும் தான் எங்களை வளத்தது!!
………………………
(குறிப்பு:- இவ் உண்மைச் சம்பவத்தை நேரில் கேட்டறிந்தவர்:- கதைவிளம்பி. நன்றி:- எரிமலை.)
ஈழ மண்ணில் நிகழ்ந்து விட்டிருக்கும் ஆயிரமாயிரம் கொடூர சம்பவங்களில் என் நெஞ்சை உருக்கிய இன்னுமொரு சம்பவம் இது!
தொகுப்பு:-
சந்திரா. ரவீந்திரன்-------------------------------


2 comments:
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.
Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
என்னைக்கு தான் விடிவு காலம் வருமோ?
Post a Comment