Thursday, 26 August 2010

இராவணன்




மணிரத்னம் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு அதிர்வை இரசிகர்கள் மத்தியில்
ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை – 'இராவணணை'த் தவிர!

மௌனராகம், அக்கினி நட்சத்திரம், நாயகன், இதயத்தைத் திருடாதே, தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால், இருவர், குரு......என்று அவரின் இயக்கத்தில் உருவானவை அனைத்தும் இதில் அடங்குகின்றன.

புதிய தொழில் நுட்பத்தை, புதிய கமெராக் கோணங்களை, நவீன ஒளியமைப்பு, ஒலியமைப்பு என்று ஏகப்பட்ட விசயங்களில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தி அதிரடித் தாக்கங்களை ஏற்படுத்தியவர். இதனால் மணிரத்னம் படங்களை ஒரு உயர் இரசிகத் தனத்துடன் எதிர்பார்த்துப் போகும் இரசிகர்களுக்கு 'இராவணன்' ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது என்று கூறலாம்!

உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்....ஆகிய திரைப்படங்கள் ஈழத்து அரசியலுடன் இணைந்த கதையாக அமையப்பெற்றிருந்ததனால்....இத்திரைக் கதைகளில் மணிரத்னம் அவர்களின் பிழையான பார்வைகள் கரிய பெரும் கோடுகளாக ஈழத்தமிழ் இரசிகர்களை உறுத்திக் கொண்டிருந்தன என்பது மறுக்க முடியாதது! இது அந்தப் படங்களின் அற்புதமான பக்கங்களையும் இரசிக்க விடாமல் இரசிகர்களை இடையூறு செய்த வண்ணமிருந்தன. அதிலும் உயிரே திரைப்படம் பலரைக் கோபத்திற்கு ஆளாக்கியிருந்தது!

ஆனால் 'இராவணன்' அதற்கும் மேல் போய் கோபத்தையும் ஏமாற்றத்தையுமே ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். இந்தப் படத்திற்கு அவர் ' இராவணன்' என்ற பெயரையே சூட்டியிருக்கத் தேவையில்லை. இராவணனின் எந்த அடையாளங்களும் இங்கே காட்டப்பட்டிருக்கவில்லை. இந்தத் திரைப்படத்திற்கு'விக்ரம்' என்றோ அன்றேல் 'வீரா' என்றோ பெயர் சூட்டியிருந்திருக்கலாம். சரித்திர இராவணனின் குணவியல்புகள் எதுவுமே இங்கு வீரா பாத்திரத்தில் சரியாகக் காட்டப்படவில்லை. சரித்திர இராவணன் ஒரு சிவபக்தன் - ஆனால் இங்கு வீரா என்னும் பாத்திரம்?
சரித்திர இராவணன் இசையில் வல்லவன்- இசையென்றால் இராகங்கள் யாவும் அத்துபடியான இசைக் கலைஞன். . இன்னுமொரு கலைஞனுடன் போட்டியிடக்கூடிய வல்லமை மிக்கவன். சரித்திர இராவணனுக்கு ஏற்கனவே மனைவி மக்கள் இருந்தனர். சரித்திர இராவணன் தான் சிறை பிடித்த சீதையை அசோகவனம் என்னும் அசோக மரங்கள் நிறைந்த, பூக்கள் பூத்துக் குலுங்கும் ஒரு மலர் வனத்திலே தான் சிறை வைத்திருந்தான். சீதைக்கு எப்போதும் காயங்கள் ஏற்படும் வகையில் இராவணன் நடந்து கொண்டதில்லை.......இப்படியே அடையாளப்படுத்தப் படாதவை என்று இத்திரைப்படத்தில் ஆயிரம் இருக்கின்றன.

 இத்தகைய திரைப்படத்திற்கு ' இராவணன்' என்ற பெயரை சூட்டியிருப்பது வேடிக்கையாக இருக்கிறதன்றி இரசிக்கக் கூடியதாக இருக்கவில்லை என்பதே என் எண்ணம்.

மணிரத்னம் அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பவற்றை அவர் இனிமேல் தராமலே விட்டு விடுவாரோ என்ற ஒரு ஐயப்பாடு மேலும் வலுக்கிறது!

–சந்திரா இரவீந்திரன்

0 comments: